Friday, December 31, 2010

வாழ்த்து

தமிழர் திருநாள் வாழ்த்து அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் (15.01.2011)மற்றும் விக்ருதி ஆண்டு தை மாதம் 1ம் நாள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!-------உங்கள் தோழன் நீலநிலா செண்பகராசன்.

Monday, December 20, 2010

பத்தி

பத்தி -       குறுங்கட்டுரை -இளமைப்பருவம் -ஆக்கம்:ப.கோபிபச்சமுத்து,கிருட்டிணகிரி ஒவ்வொருமனிதனின் வாழ்விலும் இனம் புரியாத மகிழ்ச்சியைத் தரும் பருவம் இளமைப்பருவமாகும். வயதில் மூத்தவர்கள் கூட எண்ணிப் பார்க்க விழையும் ஒப்பற்றதொரு பருவமாகும் இந்த இளமைப் பருவம். பசுமையான நினைவுகள்,பரபரப்பாய் திரிந்த தருணங்கள் என இப்பருவத்தின் தாக்கமும்,ஏக்கமும் அனைவருக்கும் உண்டு. "சிக்கலான,அமைதியற்ற பருவம்" என இப்பருவம் குறித்து "உளவியல் அறிஞர் ஸ்டேன்லி ஹால்" குறிப்பிடுகிறார். குழுமனப்பான்மை,தனி நபர் வழிபாடு என காட்டாற்று வெள்ளம்மாய் சிறும் உணர்ச்சி ஊற்றும்,கோபமும்,ஆர்வமும் ஒருங்கே பெற்றுள்ள இப்பருவ்த்தைக் கவனமாக கடந்தால் சாதனைப் படிக்கட்டில் காலை ஆழப் பதிக்கலாம். பள்ளி மற்றும் கல்லூரி காலக்கட்டத்தில் கல்வி கற்றலை இனிமையாக்கினால் இப்பருவம் மகிழ்ச்சிப் பூங்காவாக காட்சியளிக்கும்.வாழ்க்கையைப் பூஞ்சோலையாக்கும் இப்பருவத்தை திறன்பட கையாண்டால் இளைஞர் உலகம் எழுச்சியுடன் மேன்மை பெறும். இப்பருவத்தை சரியாக கையாள்வார்களா நம்முடைய இளைஞர்கள்..?

Thursday, December 9, 2010

நூல் நயம்

நூல் விமர்சனம்
"தூறலின் கடைசித்துளி"-கவிதை நூல்-நூலாசிரியர்:சந்திராமனோகரன்,இருவாட்சி பதிப்பகம்,41,கல்யாணசுந்தரம்  தெரு,சென்னை.விலை:ரூ.60/-

                காதலைக் கொண்டாடும் அகம் சார்ந்த கவிதைத் தொகுப்பாக மிளிர்கிறது "தூறலில் கடைசித் துளி" தொகுப்பு.
           "நனைந்து நனையாத உன் நினைவுத் துளிகள்" "எல்லா நதிகளிலும் உன் முகம்" "என் கண்ணீரில் எரியும் உன் தீ விழிகள்" என் பல்வேறு கவிதைகளின் தலைப்பே கவித்துவமாய் படிக்கும் வாசகர்களைப் பரவசப்படுத்துகிறது.
              "கோப்பை வழிகிறது" என்ற கவிதையில்
         "என் வரிகளையெல்லாம்
           கவிதை என்கிறாய்
           உன் முகத்தின் வியர்வையை
           விடவா அவை..?"
என்ற கேள்வியின் மூலம் கவிஞரின் அழகுணர்வை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.
           "மிஞ்சியவை" என்ற கவிதையில்
           "ஒவ்வொரு இரவும்
             மிஞ்சிப் போய் விடுகிறது
             பழைய சோற்றைப் போலவே
             உன்னைப் பற்றிய கனவுகளும்"
என்ற கவிதை வாழ்க்கையின் யதார்த்தத்தை உவமையாக்கி கட்டமைக்கப்பட்டுள்ளது.
        "தூறலின் கடைசித்துளி"- ஒவ்வொரு துளியும் காதல் உணர்வுகளில் வடிவமைக்கப்பட்ட கவித்துளி.இந்நூல் நிச்சியம் இலக்கிய தாகத்தைத் தீர்க்கும்.இது கடைசித்தூறலாக இல்லாமல் பல கவித்துளிகளைத் தர வேண்டுகிறோம்.
ஆக்கம் : நீலநிலா செண்பகராஜன்.
(நீலநிலா செப்டம்பர் 2010 & டிசம்பர் 2010 இதழில் வெளியானது).
          

நீலநிலா இதழ் கவிதைகள்

அடையாளம்
அவன் பற்றி
அவன் அறியாத போது...
அவனை                                      
அவனுக்கே
அடையாளப்படுத்தினார்கள்
"இன்ன சாதி
நீயென்று..!"
-கு.சிவபாலன்.

பயணம்
எல்லோரும்
ஜன்னலடைத்த பின்
வெளியேற முடியாமல்
எங்களுடன் பயணித்தது
பேருந்துக்குள் நுழைந்த
குளிர்..!
-வைகறை.

வழியனுப்புதல்
"டாட்டா" காட்டுவதால்
பெரியதாய் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை
எனினும்,
ஏதோ இழந்தவாறு
உணர நேர்கிறது
"டாட்டா" காட்ட மறுத்தபடி
வழியனுப்பும் குழந்தையின் செய்கையால்..!
-ச.கோபிநாத்.


பிரியமானவனே..!
முதல் பார்வையில் என் நெஞ்சில்
விதையென விழுந்தாய்...
ஒவ்வொரு நாளும் புன்னகையால்
தண்ணீர் ஊற்றினாய்..                   
என் கட்டுபாட்டை மீறி
என்னுள் வேர்விட்டாய்..
பிரியமானவனே..!
என் இதயத்தில் ஊஞ்சலாட
தென்றல் கொண்டு வருவாயா..?
அல்லது
வேருடன் சாய்க்க
புயல் கொண்டு வருவாயா..?
-வெண்ணிலா பாலாஜி.

அனாதை இல்லங்களில்
அனைவரும்
உறவுக்காரர்களாகி விட்டார்கள்.
பாவம்
சேர்த்து விட்டவர்கள் தான்
அனாதையாகி விட்டார்கள்..!
-வேல்.சரவணக்குமார்.


குளிர்க்காற்றின்
கரம் பட்டு உடைந்து
பூமியெங்கும் சிதறிக் கொண்டிருந்தது
வான் புயலாய்
உடைந்த மேங்கள்...
சில துளிகளை மட்டும்
சேமித்துக் கொண்டிருந்தேன்
நனைந்தபடி..!
-தே.ரம்யா.

வெயில் பேசுகிறது 
நான் வீசும் ஒளியால்
என் கண்கள் கூசுகிறது
நீங்கள் மரத்தை வெட்டியதால்..!


என் தாகத்திற்கு
ஆற்று நீரை வற்ற வைத்தேன்,
நதி நீரை வற்ற வைத்தேன்,
மனித உடல் நீரை கூட
வற்ற வைத்தேன்,
பிளாஸ்டிக்கை நீங்கள் 
பயன்படுத்தியதால்..!


இனி நான் மட்டும்
தனியாக போகிறேன்
உலகம் உங்களால் அழிய போவதால்..!
-குகன்.


(நீலநிலா செப்டம்பர் 2010 & டிசம்பர் 2010 இதழில் 
வெளியான கவிதைகள்).

ஆதவன் எடுக்கும்
புகைப்படம்
நிழல்.
-எம்.ரமேஸ்.

எத்தனை ஜோடிகளை
இணைக்கிறது
திருமண மண்டபம்!
-டாக்டர். எம்.எஸ்.கோவிந்தராஜன்.

துக்க வீட்டில்
கண்ணீர் துடைக்கும்
பிஞ்சு விரல்கள்.
-அ.அப்துகாதர்.

இராவணன் ஆண்டால் என்ன?
இராமன் ஆண்டால் என்ன?
கும்பகர்ண தூக்கம்.
-இராம். மோகன்தாஸ்.

நடுச்சாலையில் மனிதன்
ஒதுங்கிச் சென்றது பேருந்து
இந்திய குடி(?) மகன்.
-பெரணமல்லூர் சேகரன்.

புதைத்த இடம்
அருகேயே படுத்துள்ளது
வளர்த்த நாய்.
-பொன்.குமார்.

"அப்பளம் வேணும்" என்று
அடம்பிடித்தது குழந்தை
நிலவைக்காட்டி..!
-தனலட்சுமி பாஸ்கரன்.

மூழ்கின பயிர்கள்
உரமானது நிலத்திற்கு
உழவனின் உடல்!
-சுந்தரம்பள்ளி சிவா.

கானகங்களில்
குயில் கூவல்களுக்கு பதில்
கோடாரிச் சத்தங்கள்.
-சுகந்தம்.

வந்தாலும் ஏச்சு
வராவிட்டாலும் ஏச்சு
குழப்பத்தில் மழை.
-சந்திரா பெருமாள்.

(நீலநிலா ஏப்ரல் 2011 இதழில் வெளியான தூளிப்பாக்கள்).

Wednesday, December 8, 2010

அறிவியல் செய்தி

ஒரு கரண்டி சர்க்கரை- திடீரென்று கோபம் கொந்தளித்து வரும் பொழுது ஒரு கரண்டி சர்க்கரையை வாயில் போட்டு விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று மருத்துவ ஆய்வு சொல்கிறது.இதே போல மன அழுத்தம் இருந்தாலும் சிறிய அளவு சர்க்கரையை சாப்பிட்டாலும் சரியாகி விடும் என்றும் கூறி இருக்கின்றனர்.அதிலும் எலுமிச்சை சாறில் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.                                                           நன்றி: ஜனசக்தி நாளிதழ் 03.12.2010.

கவியோவியம்

Friday, December 3, 2010

என்னைப் பற்றிய கட்டுரை

நட்பூக்கள்-7

                     சீரிதழ்களின் மீதான ஆர்வமென்பது அலாதியான
சுகம்.எங்கு கிடைத்தாலும் தவறவிடக் கூடாது என்றே கருதினாலும்,முற்றிலுமாக அனுபவிப்பதென்பது சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்து வருகின்றது எனக்கு.அப்படியான தேடலில் நீலநிலா என்னும் காலாண்டிதழின் நிறுவனராக அறிமுகமானவர் நண்பர்  செண்பகராஜன்.
                   ஒரு குடுவைக்குள் இத்தனை லிட்டர் திரவம் நிரப்பலாம் என்பது தொடங்கி,ஒவ்வொன்றுக்கும் கொள்ளளவு உண்டு.ஆனால் மனிதத்திறமையின் கொள்ளளவு என்பதற்கு வரையறையே இல்லை சிலரைப் பார்க்கும் போது.
                  அந்த விதத்தில் இவருக்குமள் இருக்கும்  திறமைக்கும் வரையறை இல்லை!  அதிகாரியாகப் பணி,நீலநிலா இதழின் நிறுவனர்,முதன்மை ஆசிரியராக சீரிதழ் பணி,பாடகர்,பேச்சாளர்,கவிஞர்,பட்டிமன்ற நடுவர்,சமூக சேவகர் என இவரைப் பற்றி பட்டியலிட்டால் அது நீண்...........டு கொண்டே போகும்.
          1992-ல் த.மு.எ.ச.வின் சாத்தூர் கிளை நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு,97-ல் மதுரை காமராசர் பல்கலைக்கழக அளவிலான இளைஞர் கலை விழாவில் இவர் எழுதிய நாடகத்துக்கு முதல் பரிசு,2005-ல் எழுத்தாளர் ஜெயகாந்தனால் வழங்கப்பட்ட இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகத்தின் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விருது,2007-ல் கலை இலக்கிய பெருமன்றம் வழங்கிய சிறந்த எழ்த்தாளர் என்ற ஆங்கீகாரம்,2009-ல் இவரது "யாரோ எழுதிய கடிதம்" கவிதை நூலுக்கு சென்னை பெரியார் காமராஜ் பேரவை அளித்த மனித நேய முரசு பட்டம்,தாய்மண் இலக்கியக் கழகம் வழங்கிய புரட்சிப் பகலவன் விருது,2010-ல் சென்னை மகாகவி நற்பணி மன்றம் வழங்கிய பல்கலைச் செல்வர் விருது,ஜெயா டி.வி.யில் காதல் விவாத மேடை நிகழ்ச்சியில் பங்கேற்பு,தினகரன் நாளேட்டின் 'நகரும்,நடப்பும்' தலைப்பிலான நேர்காணல்,பல்வேறு இலக்கிய அமைப்புகளின் முக்கிய பொறுப்பு என இவரின் கலையுலகப் பயணத்தின் சுவடுகள் ஒவ்வொன்றும் குறிப்பிடத்தக்கவை.
            இத்தனை அங்கீகாரங்களுக்கும் உரியவரின் வயது குறைந்தது 60க்கும் மேலிருக்கும் என்று அபிப்ராயம் வந்திருப்பின் மாற்றிக்கொள்ளுங்கள்.இவரது வயது 34 தான்!இவரின் லட்சியங்கள்.....நீலநிலாவினை முன்னணி இதழாகக்கொண்டு வரவேண்டும்,வித்தியாசமான சிறந்த திரைப்படம் இயக்க வேண்டும் என்பதே. லட்சியங்கள் நிறைவேற வாழ்த்தலாமே!

ஆக்கம்: எழுத்தாளர் வேளச்சேரி .சு.கணேஷ்குமார்,கவிஓவியா இதழ் செப்டம்பர் 2010. 

திரை விமர்சனம்

கோரிப்பாளையம்



        
 சமீப காலமாக "மதுரையை" கதைக்களமாக வைத்து நிறைய திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன.அப்படி ஒரு படமாக திகழ்கின்ற திரைக்காவியம் தான் "கோரிப்பாளையம்" ஆகும்.
          "தூங்கா நகரத்தில் தூக்கம் தொலைத்த இளைஞர்களின் கதை" - என்ற முன்னுரையோடு இப்படம் துவங்குகிறது.வேலை இல்லாத இளைஞர்கள் வன்முறையை நாடினால் அவர்களது வாழ்வு சீரழிந்து விடும் என்பதை "செல்லூலாயிடில்" அழகாக சிற்பமாக வடித்துள்ளார் இப்படத்தின் இயக்குனர் இராசு மதுரவன் அவர்கள்.
             படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக கையாளப்பட்டிருந்தாலும் வசனங்களில் அதிகமாக "நாடகத்தன்மை" உள்ளமையால் பார்வையாளர்ளை சலிக்க வைக்கிறது.
              மதுரை என்றாலே அரிவாளுடன் ரௌடித்தனம் செய்வார்கள் என்று இப்படத்தில் காட்டப்பட்டிருக்கும் விசயம்,கதையின் யதார்த்தத் தன்மையை சற்று மிகைப்படுத்துவதாக அமைந்துள்ளது.மேலும் வன்முறை காட்சிகளை சற்று குறைத்துருந்தால் பெண் பார்வையார்களிடையே நல்லதொரு தாக்கத்தை இத்திரைப்படம் ஏற்படுத்தியிருக்கும். 
                    "அழகர்" கதாபாத்திரம் பாராட்டத்தக்க நடிப்பாகும்.மற்றபடி 5 நண்பர்கள்,காமெடி,குத்துப்பாட்டு,அரிவாள் சண்டை போன்ற வழக்கமான அம்சங்களை சற்று தவிர்த்திருந்தால் "கோரிபாளையம்" மதுரை புகழ் ஜிகர்தண்டாவின் ருசியைப் பருகிய திருப்தியை அனைத்து திரை ரசிகர்களுக்கும் அளித்திருக்கும்."கோரிப்பாளையம்"- இளைஞர்களின் புதுக்கவிதை.

ஆக்கம்: நீலநிலா செண்பகராஜன், தாழம்பூ இதழ் சூலை-செப்டம்பர் 2010 இதழ்.

Thursday, December 2, 2010

வித்தியாசமான குறுஞ்செய்திகள்

"பக்கத்து வீட்டு விசேசத்தின் நாதஸ்வர இசை என்னை எழுப்ப, என் விரல்கள் சொல்கிறது "காலை வணக்கம்"  அலைபேசி வழியாக- உங்களை  எழுப்பும் இசையாக நான்!"

"இரவு என்னும் கவிதை நம்மை வரவேற்கிறது! இரவு கவிதையிடம் வணக்கம் சொல்வோம்!" 

ஆக்கம் : நீலநிலா செண்பகராஜன்.